சிறப்பாக செயல்பட்ட துணை ஆணையாளர் முனைவர் பிரபாகர் அவர்களின் டீமை பாராட்டிய சென்னை ஆணையாளர்.
சென்னை, கீழ்கட்டளை, பாலாஜி நகர் மனோகரமோகன்என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 29.9.2020 அன்று வீட்டை பூட்டிவிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு திரும்ப வந்து பார்த்த போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 37 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து மனோகர மோகன் , S-7 மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

புனித தோமையர்மலை துணை ஆணையாளர் முனைவர் K.பிரபாகர் அவர்களின் நேரடி கண்காணிப்பில், மடிப்பாக்கம் சரக உதவி ஆணையாளர் T.சவரிநாதன் தலைமையில் காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தப்பட்டிருந்த 150க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், தீவிர புலனாய்வு மேற்கொண்டும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான செல்வம்,சக்திவேல்,15 வயதுடைய இளஞ்சிறார் ஒருவர் என மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 51 சவரன் தங்க நகைகள், செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட மூன்று நபர்களும் மடிப்பாக்கம் பகுதியில் 3 வீடுகளிலும், சேலையூர் பகுதியில் ஒரு வீட்டிலும் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடியது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் குற்றவாளி செல்வா மீது கஞ்சா விற்பனை மற்றும் திருட்டு வழக்குகள் உட்பட 6 வழக்குகள் உள்ளதும், சக்திவேல் மீது 7 திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 3 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.


Comments (0)
Facebook Comments (0)